ஹமீர்பூர்:
உத்தரப்பிரதேசத்தின் ஹமீர்பூர் தொகுதி பாஜக எம்எல்ஏ-வாக இருப்பவர் அசோக் சிங் சண்டல். கடந்த 1997-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி இவருக்கும், மற்றொரு பாஜக தலைவரான சுக்லா என்பவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் துப்பாக்கியால் சுடும் அளவிற்குப் போனது.
ராஜீவ் சுக்லாவின் 2 மூத்த சகோதரர்களான ராகேஷ், ராஜேஷ் மற்றும் மருமகன்களான அம்புஜ், வேத் நாயக் மற்றும் ஸ்ரீகாந்த் பாண்டே என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை, அசோக் சிங் சண்டல் தரப்பினர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.ஆனால், இந்த வழக்கில் சண்டல் உள்ளிட்ட 10 குற்றவாளிகளையும் கடந்த 2002-ஆம் ஆண்டு கூடுதல் செசன்ஸ் நீதிபதி விடுதலை செய்தார்.
இந்நிலையில், உத்தரப்பிரதேச அரசும், சுக்லாவும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டை விசாரித்த உயர்நீதிமன்றம், செசன்ஸ் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து, சண்டல் உட்பட 8 பேருக்கும், கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மேலும் அவர்களை உடனடியாக கைது செய்யவும் கடந்த மே 6-ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து, அசோக் சிங் சண்டல், ரகுவீர் சிங், அசுதோஷ் சிங்,நசீம் மற்றும் பான் சிங் ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். இவர்கள் தவிர, உத்தம் சிங், பிரதீப் சிங் மற்றும் சஹாப் சிங் ஆகியோரும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.